கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து 123 தோட்டாக்கள் காவல்துறையினரால் நேற்றையதினம் (22) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பயணப்பையில் சிறிய இரும்பு பெட்டியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பண்டாரவளை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று பிற்பகல் பண்டாரவளை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பண்டாரவளை பேருந்து நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவ்வாறு 123 செயற்படக்கூடிய தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் , சந்தேகத்திற்குரிய எவரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த தோட்டக்களில் 113 பிஸ்டல் தோட்டாக்கள், 9 T56 தோட்டாக்கள் மற்றும் T56 LMG தோட்டா ஒன்றும் காணப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பண்டாரவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.