கடந்த ஆண்டு 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் செயலாளர் மற்றும் அமைப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக இன்று (25.03.25) எஸ். வியாழேந்திரன், கொழும்பு புதுக்கடை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, மண் அகழ்விற்கு அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்து, வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றதற்காக, முன்னாள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர் மற்றும் பிரதேச அமைப்பாளர் ஆகியோர் மட்டக்களப்பு கல்லடி கடற்கரைப் பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர், அந்தச் சம்பவத்திற்கு அமைச்சரும் உடந்தையாக இருந்துள்ளார் எனக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, விசாரணை விபரங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று (25) புதுக்கடை நீதிமன்றப் பகுதியில் வைத்து எஸ். வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, 2022 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் திகதி, அவரது பிரத்தியேக செயலாளராக இருந்த அவரது சகோதரர், ஒரு காணிக்காக 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற நிலையில், மட்டக்களப்பு நகரிலுள்ள உணவகம் ஒன்றில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.