71
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்கள் சந்திப்பும் ஆய்வுப் பணியும் நேற்று (12.06.2026) முன்னெடுக்கப்பட்டதாக அரசியல் செயற்பாட்டாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
முகாமில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், அடிப்படை வசதிகள், குடியிருப்பு தேவைகள் மற்றும் எதிர்கால வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அங்குள்ள குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படவுள்ள புதிய குடியிருப்புகளின் இறுதிக்கட்ட கட்டுமானப் பணிகளையும் அவர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்தும் நோக்கில் வீட்டு வசதி திட்டங்கள் முக்கிய பங்காற்றும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கை உள்நாட்டுப் போரினால் தாயகத்தை விட்டு வெளியேறிய பல இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள மறுவாழ்வு முகாம்களில் தொடர்ந்து வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love

