Home இலங்கை மக்களுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதை ஊட்டுகின்றனர்

மக்களுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதை ஊட்டுகின்றனர்

by admin
சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை கூறி, தமிழ் மக்களுக்கு ஒரு போதையை ஊட்டுகின்றனர். அவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்  என கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்
யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலகத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலவச அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து, ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டம் வட மாகாணத்தை பொறுத்தவரையில், இலங்கையினுடைய ஏனைய மாகாணங்களை விட சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.

ஒரு தேவையற்ற யுத்தத்தில் விசேடமான பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு எங்கள் மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் இந்த நாடு கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தம் காரணமாக, கொரோனா தொற்று காரணமாக, ஆட்சி தலைவர்களின் நிதி மற்றும் பொருளாதார முறையான முகமைத்துவம் இல்லாத நிலை காரணமாக, எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது.அந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக் கூடிய, பாதிப்பில் இருந்து மக்களை மீட்க கூடிய, முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை.
எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அவர்கள் முன் வந்ததை மக்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும், கிளிநொச்சியில் 800 ஏக்கர் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

அதில் எந்தவிதமான உண்மை இல்லை.  நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை. எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வாறான பொய்யினை சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுவதன்  ஊடாக மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை வைத்து வருகின்றார்கள். அது தொடர்பில்,  மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

போதை வஸ்து பற்றி பேசுகின்றோம். இவர்களுடைய இந்த கருத்துக்களும் மக்களுக்கு ஒரு போதை ஊட்டக்கூடிய வகையில் தான் அமைந்திருக்கின்றனஎன்றார்,

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More