Home இலங்கைமாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்!

மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்!

by admin

அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்ற போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வருவதாகப் பிரித்தானியா வாக்குறுதியளித்தது என  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் கூட்டத்தில் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், கலந்துரையாடினோம். இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது புதிய அரசமைப்பின் ஊடாக தீர்வு ஒன்று முன் வைப்போம் என்ற வாக்குறுதியுடன் வந்திருந்தார்கள். ஆனால் தற்போது வரை அது குறித்துப் பேச்சு ஏதும் அரசு பக்கத்தில் இருந்து கிடையாது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முற்றாக நீக்குவது தொடர்பிலும் எமது கவனத்தைச் செலுத்துவோம். ஏனெனில் ஜே.வி.பியினர் கடந்த காலங்களில் இந்தவிடயத்திற்காக எம்மோடு இணைந்து செயல்பட்டனர். மாற்றுச் சட்டங்களை முன்னைய அரசாங்கங்கள்  கொண்டு வந்தபோது மாற்று எதுவுமே தேவையில்லை என அவர்கள் வாதிட்டனர். ஆனால் தற்போது மாற்றுச் சட்டம் குறித்துப் பேசுகின்றனர். எனவே நாம்இதை கடுமையாக எதிர்க்கின்றோம்.

புதிய அரசமைப்புத் தொடர்பில் அரசு உடனடியாக தனது தீர்வை முன் வைக்க வேண்டும். அதுவரை மாகாண சபைகள்
இருக்கின்றபடியே இயங்குவதற்கு நாங்கள் ஏது செய்வோம் என எமது கட்சி அலுவலக வாசலில் வைத்து ஜனாதிபதியாக முன்னர் அநுரகுமார திஸாநாயக்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார். அதனை துரிதமாக – காலத்தை இழுத்தடிக்காது செய்ய
வேண்டும். மாகாண சபைத் தேர்தலுக்குத் தடையாக உள்ள சட்ட திருத்தத்தை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற வேண்டும்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் சம்பந்தமான தீர்மானத்தின் காலம் நிறைவடைகின்றது. அதனால் அது நீடிக்கப்பட வேண்டும்.
இதைக் கூறினால் அரசிற்கு காலஅவகாசம் நாம் பெற்றுக் கொடுப்பதாகக் கூறுவார்கள். அது அப்படி அல்ல. சர்வதேச  மேற்பார்வையைத் தொடர்ந்து தக்க வைப்பதாக இருந்தால் இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் அந்த மேற்பாவையை மேற்கொள்ளலாம். அண்மையில் தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவுக்கு சென்றபோது அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை சந்தித்தேன். இதன்போது இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வருவதாகப் பிரித்தானியா வாக்குறுதியளித்தது.

புதிய அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. ஜனாதிபதி தேர்தலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை அந்த தீர்மானத்தில் கொண்டு வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

இதில் புதிதாக வந்துள்ள விடயம் செம்மணி புதைகுழி விவகாரம். அண்மையில் ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரே நேரடியாகப் பார்த்துச் சென்றுள்ளார். செம்மணியில் இனப்படுகொலைக்கான ஆதாரம் வெளிவருகின்றது என நாம் ஜனாதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளோம். இதன் பிரதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கும்
உறுப்பு நாடுகளிற்கும் வழங்கியுள்ளோம் – என்றார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More