கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் இன்று புதன்கிழமை (01) பிற்பகலில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன
முகமாலை வடக்கு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தமது வீட்டினை சுத்தம் செய்யும் போது பள்ளம் தோண்டிய போது அப் பிரதேசத்தில் ஆபத்தான நிலையில் வெடிக்காத குண்டுகள் காணப்பட்டுள்ளன. உடனடியாக வீட்டு உரிமையாளர் பளை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்
அதன் பின்னர் கிளிநொச்சி நீதி மன்றத்தின் உத்தரவுடன் பாதுகாப்பான முறையில் வெடி குண்டிகளை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் .
இதேவேளை மோதரை (முகத்துவாரம்) அளுத் மாவத்தை பகுதியில் உள்ள நகராட்சி வேலைத்தளத்துக்கு அருகில் ஒரு பாடசாலை பையில் இருந்து கைப்பற்றப்பட்ட 10 கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்து, அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஓஷத மிகாரா மகாராச்சி மோதரை காவல்துறையினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக சிறப்பு காவல்துறைக் குழு முன்வைத்த உண்மைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேக நபர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினா் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்டு, குண்டுகளை செயலிழக்கச் செய்ய அனுமதித்த மேலதிக கூடுதல் நீதவான், அரசாங்க பகுப்பாய்வாளரின் அறிக்கையை பெறுமாறு உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அவர் மோதரை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்

