டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்குவதற்காக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
கடந்த டித்வாப் புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர் தொடர்பாக பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இவ் உதவும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன
அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்பட்ட கொமேட் வசதியுடனான சக்கர நாற்காலி, சாதாரண சக்கர நாற்காலிகள், கை ஊன்று தாங்கிகள் , முழங்கையுடனான ஊன்று தடிகள் ஆகியன சண்டிலிப்பாய், நல்லூர், காரைநகர், சாவகச்சேரி, சங்கானை , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக மாவட்ட செயலர் க. சிவகரன் உதவி மாவட்ட செயலாளர் உ. தர்ஷினி, சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டனர்.

