ஈரான் தலைநகர் தெஹ்ரான் மாகாணத்தின் அண்டிஷே (Andisheh) நகரில் அமைந்துள்ள அர்கவான் (Arghavan) வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பல அடுக்குமாடிகளைக் கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்ததுடன், மக்கள் அச்சத்தினால் வெளியேறியுள்ளனர்.
காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடியே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். வணிக வளாகத்தின் பெரும்பகுதி தீயினால் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
தற்போதைய மத்திய கிழக்கு அரசியல் சூழலில் இந்த விபத்து முக்கியத்துவம் பெறுகிறது. அமெரிக்காவுடனான மோதல் போக்கிற்கு மத்தியில், கடந்த மூன்று வாரங்களாக ஒரு தற்காலிகமான போர்நிறுத்தம் (Fragile Ceasefire) அமுலில் உள்ளது. போர்ச் சூழலுக்கு மத்தியில் இத்தகைய விபத்துக்கள் நிகழ்வதால், இது ஒரு விபத்தா அல்லது ஏதேனும் சதி வேலையா (Sabotage) என்பது குறித்து ஈரான் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தீ விபத்திற்கான அதிகாரப்பூர்வமான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
ஈரானில் அண்மைக்காலமாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் இவ்வாறான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது அந்நாட்டு மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் பிாித்தானியா உள்ளிட்ட நாடுகள் செங்கடல் பகுதியில் தமது இராணுவப் பிரசன்னத்தை அதிகரித்துள்ள நிலையில் ( சார்லஸ் டி கோல் கப்பல் வருகை போல), தெஹ்ரானில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து தற்செயலானதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

