64
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை (15 ஜூன் 2026) நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, காவற்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து நடைபெற்றது. இன்றைய அகழ்வாராய்ச்சியின் போது, அதிர்ச்சியூட்டும் பல புதிய விபரங்கள் வெளிவந்துள்ளன.
இன்றைய தின அகழ்வுப் பணிகளின் போது புதிதாக 05 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் இருந்து இரு சிறுவர்கள் மற்றும் ஒரு கைக்குழந்தையினுடையது உட்பட மொத்தம் 10 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்படும் மனித என்புக்கூடுகள் பல உடைந்த நிலையிலும், ஒழுங்கற்ற (நேர்சீரின்மையான) நிலையிலும் காணப்படுவதாக அகழ்வாராய்ச்சிப் பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், செம்மணிப் பகுதியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது ஒட்டுமொத்தமாக 360 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 351 என்புக்கூடுகள் இதுவரையில் பாதுகாப்பான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அகழ்வுப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
Spread the love

