யாழ்ப்பாணம், அரியாலை நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி , பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவா் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இன்று (2026 ஜூன் 18, வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணக் காவற்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த, பகலகம பகுதியைச் சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காவற்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணைகளின்படி, இச்சம்பவத்தின் பின்னணியில் பின்வரும் விபரங்கள் தெரியவந்துள்ளன: குறிப்பிட்ட இராணுவச் சிப்பாய் விடுமுறையில் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலமாகப் பணிக்குத் திரும்பாமல் இருந்துள்ளார். நீண்ட நாட்களின் பின்னர் இன்றைய தினம் அவர் மீண்டும் பலாலி இராணுவ முகாமிற்குப் பணிக்குத் திரும்பியுள்ளார். இதன்போது, அவர் நீண்ட காலம் பணிக்குச் சமுகமளிக்காதமை குறித்து, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று உத்தியோகபூர்வமாக விளக்கம் அளிக்குமாறு பலாலி முகாம் உயர் அதிகாரிகள் அவருக்குப் பணித்துள்ளனர்.
அதிகாரிகளின் உத்தரவைத் தொடர்ந்து பலாலி முகாமில் இருந்து வெளியேறிய சிப்பாய், அரியாலை நெளுக்குளம் பகுதிக்குச் சென்று அங்கு வந்த தொடருந்துடன் மோதி உயிரிழந்துள்ளார். இது தற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்ற கோணத்திலும் காவற்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

