174
மட்டக்களப்பு மாநகர சபையின் ஆளுமைக்குட்பட்ட, நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய நவீன பொதுநூலகக் கட்டிடம் இன்று (மே 20) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 16 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு, பல தடங்கல்களுக்கு மத்தியில் 345 மில்லியனுக்கும் அதிக செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நூலகம், கொழும்பு பொதுநூலகத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் இரண்டாவது பெரிய நூலகமாகத் திகழ்கிறது.
இவ்விழாவின் போது ஒரு முக்கிய அரசியல் நகர்வாக, ஜனாதிபதியின் விசேட வேண்டுகோளின் பேரில், இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நூலகத்தின் நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் மற்றும் அதிகாரப்பரவலாக்கல் குறித்து ஜனாதிபதிக்கு மிக முக்கியமானதொரு செய்தியை முன்வைத்தார்:
“எங்கள் ஆளுமைக்குட்பட்ட (மாநகர) சபையின் இந்த நூலகத் திறப்பு விழாவில், என்னை விசேடமாக அழைத்து நினைவுக்கல்லைத் திரைநீக்கம் செய்ய மதிப்பளித்ததைப் போல, தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையான அதிகாரப் பரவலாக்கலையும் நீங்கள் நிச்சயம் செய்து முடிப்பீர்கள் என்ற பலத்த நம்பிக்கை எனக்குண்டு.”
மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் இருக்கும் ஒரு திட்டத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்திற்கு மதிப்பளித்த ஜனாதிபதி, மாகாண மற்றும் தேசிய மட்டத்திலும் தமிழ் மக்களுக்கான உண்மையான அதிகாரப்பரவலாக்கலை வழங்குவார் என்ற அரசியல் எதிர்பார்ப்பை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
Spread the love

