வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை சர்வதேசத் தரத்திற்கு மேம்படுத்தும் நோக்கில், காங்கேசன்துறை சந்தி பகுதியை அழகுபடுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் ‘Clean North’ செயற்றிட்டத்தின் ஊடாக இப்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த அழகுபடுத்தும் பணிகளுக்காக முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சந்திப் பகுதியில் வீதியோர நடைபாதைகள் (Walkways) அமைத்தல், சூழலைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் நில அலங்காரப் பணிகளை முன்னெடுத்தல் மேற்கொள்ளப்படவுள்ளது.
வடமாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் பிரகாஸ் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று பணிகளின் முன்னேற்றத்தைப் பார்வையிட்டனர்.
காங்கேசன்துறை என்பது வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் போக்குவரத்து மையமாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் அழகான கடற்கரைகளை இணைக்கும் பிரதான புள்ளியாக இந்தச் சந்தி அமைந்துள்ளதால், இதனை அழகுபடுத்துவது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

